100 நாள் வேலை திட்டம்!. ஆகஸ்ட் 31 தான் கடைசி காலக்கெடு!. வெளியான முக்கிய தகவல்!

100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு ஒரே அடியாக பணம் செலுத்தும் முறையாக ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை அமல்படுத்துவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31க்கு மேல் நீட்டிக்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு ஊதியம் வழங்க ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை (AEPS – Aadhaar Enabled Payment System) பயன்படுத்துவதை மத்திய அரசு கட்டாயப்படுத்தியது. இந்த AEPS முறையைக் கட்டாயமாக ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு முதலில் பிப்ரவரி 1 ஆக இருந்தது. அது பின்னர் மார்ச் 31 எனவும், பின்னர் ஜூன் 30, கடைசியாக ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 31க்கு மேல் இந்த காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படாது என்று தெரியவந்துள்ளது. ஜூன் மாதம் அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மொத்தம் 14.28 கோடி பயனாளிகளில் 13.75 கோடி பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 12.17 கோடி ஆதார் எண்கள் அங்கீகரிக்கப்பட்டு, 77.81 சதவீதம் பேர் AEPS முறைக்கு தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டது. 

கடந்த மே மாதத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 88 சதவீதம் சம்பளப் பணம் AEPS மூலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த AEPS முறையை 100 சதவீதம் ஏற்றுக்கொள்வதற்கான முகாம்களை ஏற்பாடு செய்து பயனாளிகளுக்கு தெரிவிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் வலியுறுத்தியுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Previous Post Next Post