கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது: இம்மாத இறுதிக்குள் முதல் பட்டியல் இறுதி செய்ய வாய்ப்பு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், வரும் செப்.15-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் 24.7.2023 அன்று தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாகவும் மற்றும் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு 20.08.2023 அன்றுடன் விண்ணப்பங்கள் பதியும் பணி நிறைவடைந்தது.

முதற்கட்ட முகாம்கள் ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 04-ம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 05-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்றது. விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு மொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்காக வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளின் முதல் பட்டியலை அரசு இறுதி செய்யவுள்ளது. 

திட்டத்திற்கான தன்னார்வலர்கள், கல்வித்துறை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கின்றனர்.களஆய்விற்கு வரும் அலுவலர்களுக்கு விண்ணப்பதாரர்கள் உரிய தகவல்களை அளித்து தகுந்த ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொள்ளபட்டுள்ளது.
Previous Post Next Post