பக்தி இலக்கிய வரிகள்

"தோடுடைசெவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பூசியென் உள்ளம்கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனைநாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றே"

[திருஞானசம்பந்தர் - முதல் பாடல்]


"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியார் அவர்க்கு மிகவே"

[திருஞானசம்பந்தர் - கோளறு பதிகம்]


"கூற்றாயினவாறு விலக்ககலீர்
கொடுமை பல செய்தன நானறிவேன்"

[திருநாவுக்கரசர் - முதல் பாடல்]


"மாசில்வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"

[திருநாவுக்கரசர் - சுண்ணாம்புக்காளவாசலில் வீசப்பட்ட போது]

"சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றூணைப் பூட்டியோர் கடலிலே பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே"

[திருநாவுக்கரசர்- கல்லில் கட்டி கடலில் வீசப்பட்ட போது]


"தலைகொள் நஞ்சமுதாக விளையுமே
தழல்கொள் நீறுதடாகமது ஆகுமே
கொலைசெய் யானை குனிந்து பண்யுமே
கோளரா வின்கொடு விடம் தீருமே"

[திருநாவுக்கரசர் - பல்லவ மன்னனால் அடைந்த துன்பங்கள்]

"முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டா:
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே"

[திருநாவுக்கரசர் - அகத்துறைப் பாடல்]

"பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா!
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தாய்! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே"

[சுந்தரர் - முதல் பாடல்]

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் சென்சட மேல்மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே"

[சுந்தரர்]

"பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ பாவியேனுடைய
ஊனுடை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உவப்பிலா ஆனந்தமாய
தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்த ருளுவது இனியே"

[மாணிக்கவாசகர்]

"தேனுக்குள் இன்பம் சிவப்போ? கறுப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!"

[திருமூலர்]


"ஒன்றே குலமே ஒருவனே தேவன்"
"யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
"நன்றே நினைமின் நமனில்லை"
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"

[திருமூலர்]

"எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத்து அவ்வுருவே யாம்"

"அறிவானும் தானே: அறிவிப்பான் தானே:
அறிவாய் அறிகின்றான் தானே; விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்"

[காரைக்கால் அம்மையார்]

"வையந் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று"

[பொய்கையாழ்வார்]

"இருந்தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழில் நல்வேன் பெரிது"

"அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்"

[பூதத்தாழ்வார்]

"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று"

[பேயாழ்வார்]

"மாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி
ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச்சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக் குறளனே! தாலேலோ!
வையமளந்தானே! தாலேலோ!

[பெரியாழ்வார்]

"கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவள செவ்வாய்தான் தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழிவெண் சங்கே"

[ஆண்டாள்]

Post a Comment

Previous Post Next Post