பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?


தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களின் வாழ்வாதாரத்திற்கும், முன்னேற்றத்திற்கும் புதிய திட்டங்களை அரசு அவ்வபோது அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், மகளிர் உரிமைத்தொகை, திருமண உதவித்திட்டம், கர்ப்பிணி பெண்கள் உதவி திட்டம் கைம்பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவி திட்டம், விதவை மறு திருமண உதவி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி அரசு மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. மேலும், சொந்த தொழில் தொடங்க திட்டமிடும் நபர்களுக்கு இலவச பயிற்சி வழங்கி தேவையான கடனுதவிக்கும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும், பெண்கள் சொந்த தொழில் தொடங்க 5 லட்சம் ரூபாய் மானியத்திலும் வழங்கி வருகிறது. ஆடு, மாடு, கோழி போன்றவை வளர்க்கவும் உதவித்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது.

பெண்கள் சொந்தமாக முன்னேற வேண்டும், யாரையும் நம்பி இருக்க கூடாது, சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது

இத்திட்டத்திற்கான வயது 20 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். தையல் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் ஆண்டு வருமானமாக ரூ.72 ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், இத்திட்டத்திற்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

இரு கைகளும் நல்ல நிலையில் கால்கள் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள். 75% மேல் உள்ள மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மாராக இருத்தல் வேண்டும். தையல் பயிற்சி பயின்றதற்கான சான்று பெற்றிருக்க வேண்டும்.

குறிப்பாக, விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு இ-சேவை மையம் மூலமாகவும்,https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற தளத்திலும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Previous Post Next Post