10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 3,000 காலிப் பணியிடங்கள்.

தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த ரேசன் அட்டைதாரர்களுக்கு மாநில முழுவதும் 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் அட்டை திட்டம் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்கிடையில் அவ்வப்போது ரேஷன் கட்டைகளில் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் கீழ் இருக்கும் நியாய விலைக்கடைகளில காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

பணி விவரம்:

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர்கள் (salesman), கட்டுநர்கள் (packers) பதிவுகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் சுமார் 3,308 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரியலூரில் 34 இடங்களும், செங்கல்பட்டில் 184 இடங்களும், சென்னையில் 348 இடங்களும், கோவையில் 199 இடங்களும், கடலூரில் 152 இடங்களும், தருமபுரியில் 58 இடங்களும், திண்டுக்கல்லில் 63 இடங்களும், ஈரோட்டில் 99 இடங்களும், கள்ளக்குறிச்சி 70 இடங்களும், காஞ்சிபுரத்தில் 51 இடங்களும், கரூரில் 73 இடங்களும், கிருஷ்ணகிரியில் 117 இடங்களும், மதுரையில் 106 இடங்களும், மயிலாடுதுறையில் 45 இடங்களும், நாகையில் 19 இடங்களும், `நாமக்கல்லில் 109 இடங்களும் உள்ளிட்ட 38 மாவட்டங்களிலும் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. எனவே அந்தந்த மாவட்டத்திற்கான பிரத்யேக இணையத்தளத்தில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம்:

நியாய விலைக் கடையில் விற்பனையாளர் பணிக்கு தொகுப்பு ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை ரூ.6,250 வழங்கப்படும், ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.8,600 முதல் 29,000 வரை வழங்கப்படும். எனவும், நியாய விலைக் கடையில் கட்டுநர் பணிக்கு தொகுப்பு ஊதியமாக நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை ரூ.5,500 வழங்கப்படும். ஓராண்டுக்கு பிறகு ஊதிய விகிதம் ரூ.7,800 முதல் 26,000 வரை வழங்கப்படும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

நியாய விலைக் கடையில் விற்பனையாளர் பணிக்கு 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நியாய விலைக் கடையில் கட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பணிகளுக்கும் தமிழ் மொழியில் பேசவும், எழுதப் படிக்கவும் போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2024-அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், அருந்ததியிர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினருக்கு (OC) 32 வயது வரை இருக்க வேண்டும். அனைத்து இனத்தைச் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை. இதர வகுப்பினைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு 50 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை;

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இனச்சூழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்விற்கு கட்டாயமாக நேரில் வருகை புரிய வேண்டும். நேர்முகத் தேர்வுக்கு வருகை புரியாத விண்ணப்பதாரர்கள் மேற்படி பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணிகளுக்கு https://drbchn.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். Direct Recruitment Bureau என்பதை உள்ளீட்டு மாவட்ட பெயரை போட்டு இணையத்தில் தேடினால் உங்களுக்கான விண்ணப்பம் கிடைக்கும். நேரிலோ அல்லது தபாலிலோ விண்ணப்பங்கள் பெறப்படமாட்டாது.

அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் புகைப்படம், கையெழுத்து, சாதிச் சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். இதையெல்லாம் சமர்ப்பித்து, விண்ணப்ப கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

விற்பனை பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150, கட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக நலத்துறை அலுவலகரிடம் இருந்து சான்றிதழும், மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

முக்கிய நாட்களும் நேரமும்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 07.11.2024 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post